\
SamayamStory

விடாமுயற்சிக்கு வழிவிடும் கடவுள்

நமது பாரத நாட்டில் சொர்க்கபுரி என்னும் அழகான ஊர் இருந்தது.
ஊரின் பெயருக்கு ஏற்றது போல சொர்கத்திற்க்கு இணையான அனைத்து வசதிகளும் கொண்டிருந்தது.அந்த ஊரில் பருவநிலை தவறாது, மழையானது பொழிந்துக் கொண்டே இருக்கும்.அந்த ஊரில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்தனர்.அப்படியிருக்க நாளடைவில், எல்லா வளங்களும் இருந்ததால் கடவுளை மறந்து இயற்கைக்கு முரணாக வாழ தொடங்கினர்.

ஒருவரின் மீது மற்றொருவர் பொறாமை கொண்டனர். இதனால் மற்றவர்களின் வளர்ச்சியை அழிக்கும் நோக்கில் செயல் பட்டனர்.இதனைக் கண்ட காக்கும் கடவுளான விஷ்ணு பகவான், மிகுந்த கோபம் கொண்டு அந்த சொர்க்கபுரி ஊரினை சபித்தார்.விஷ்ணு பகவான் தன் கையில் வைத்திருக்கும் சங்கினை ஊதினால், இந்திரன் வருண பகவானுக்கு மழை பொழிய வேண்டும் என ஆணையிடுவார் என்பது நம்பிக்கை.

இனி 18 ஆண்டுகளுக்கு சொர்க்கபுரிக்கு மழை பொழிய போவதில்லை, நானும் எனது சங்கினை ஊதப்போவதில்லை என்றார்.இதனை கேட்ட சொர்க்கபுரி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷ்ணு பகவான் அங்கிருந்து மறைந்தார்.அன்றிலிருந்து மழையானது பொழியாமல் போனது. நிலங்கள் வறண்டு போனது. மக்களும், இனி மழைப்பொழிய போவதில்லை என்று விவசாயத்தை கைவிட்டனர்.விஷ்ணு பகவான் தலைக்கு அடியில் சங்கினை வைத்து உறங்க ஆரம்பித்தார்.

ஆனால், அந்த சொர்க்கபுரியை சேர்ந்த தருமன் என்பவன், பெயருக்கு ஏற்றார்ப்போல வாழ்ந்து வந்தான்.கடவுள் மீது கொண்ட பக்தியால், எப்படியும் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் இருந்தான்.
தினந்தோறும், அதிகாலையில் தனது ஏர்கலப்பையை எடுத்து வயலுக்கு சென்று நிலத்தை உழுவது, மாலையில் வீடு திரும்புவது என்று இருந்தான்.இவனைப் பார்த்த அவனது ஊர் மக்கள் கேலியும், கிண்டலும் செய்த வண்ணம் இருந்தனர்.இதனைப் பார்த்த இந்திரன், விஷ்ணுபகவானிடம் கூறினார். விஷ்ணு பகவானும் துயிலில் இருந்து மீண்டு, இனி நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நாட்கள் ஓடின. நாட்கள் மாதங்களாகின. ஆனால் தருமன் மட்டும் மாறவில்லை.
அதிகாலையில் எழுவது, வயலுக்கு சென்று நிலத்தை உழுவது என்றே இருந்தான். ஆனால் மழை மட்டும் பொழிவதாக இல்லை.விஷ்ணு பகவான் இவனது விடா முயற்சியை பார்த்து ஆச்சரியப்பட்டார்.அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருந்தார்.தினமும் தருமனை பார்த்து கிண்டலும், கேலியும் அதிகமானது. ஆனால் அதனை தருமன் கண்டுகொள்ளவில்லை.

விஷ்ணு பகவானோ தன்னையும் மறந்து தருமனையே பார்த்து கொண்டியிருந்தார்.ஒரு கட்டத்தில் அந்த ஊர் மக்கள் அனைவரும் தருமனை பார்த்து, மழை பொழியாது என்று தெரிந்தும் பல மாதங்களாக எதற்காக உழுது கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டனர்.அவர்களை பார்த்து தருமன் நீண்ட நாட்களாக ஒரு வேலையை செய்யாமல் இருந்தால் அது மறந்து போய்விடும் என்பார்கள்.

18 ஆண்டுகளுக்கு பிறகு மழை பொழியும் பொழுது, உழவதை மறந்து போய்விடாமல் இருக்கவே தினமும் உழுது கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.இதனை கேட்ட விஷ்ணு பகவான், தானும் சங்கினை ஊத மறந்து போய்விடுவேனோ என்று சங்கினை எடுத்து ஊத தொடங்கினர்.சங்கு நாதத்தை கேட்ட இந்திரன் வருணனுக்கு மழை பொழிய உத்தரவிட்டான். மழையும் பொழிந்தது.

மழை பொழிய தருமன் தான் காரணம் என்று ஊர் மக்கள் தருமனை கொண்டாடினார்கள்.அப்பொழுது விஷ்ணு பகவான் மக்கள் முன்பு தோன்றினார்.மக்களை பார்த்து தருமனின் விடா முயற்சியையும், தன்னம்பிக்கையும், அவன் செய்யும் தொழிலின் மீது கொண்ட பக்தியையும் கண்டு வியக்கிறேன்.
எனது கோபத்தினை சாமர்த்தியமாக வென்று விட்டாய், நீண்ட பெருமையுடம் வாழ்வாய் என ஆசீர்வதித்து மறைந்தார்.சொர்க்கபுரி மீண்டும் தனது பெயருக்கு ஏற்றார்போல சொர்க்கமாக மாறியது.

கதையின் நீதி!

ஒருவரின் விடாமுயற்சியும், தான் செய்யும் தொழிலின் மீதுள்ள அளவுக்கடந்த பக்தியும், கண்டிப்பாக வெற்றிக்கு அழைத்து செல்லும்.ஒருவர் முயற்சியை கண்டு மற்றவர் கேலி செய்வார். அவர்களுக்கு நீங்கள் செய்வதை புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.நீங்கள் வெற்றி அடைந்ததும், அந்த கேலியும், கிண்டலும் புகழாக மாறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us