
வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து தன்னுடைய பதினோராவது கதையை கூறத்தொடங்கியது.
அழகாபுரி என்னும் நாட்டை சிவசேகரன் என்னும் மன்னன் சிறப்பாக ஆட்சிப்புரிந்து வந்தான். அவனுக்கு அதிசுந்தரி, வதனமாலா மற்றும் மிதுனசேகரி என்னும் மூன்று மனைவிகள் இருந்தனர்.
அவன் அவர்கள் மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தான். மூவரும் மன்னன் மீது பேரன்பு கொண்டிருந்தனர். வசந்தக்காலத்தில் மணம் மிகுந்த மலர் ஒன்றை முதல் மனைவியான அதிசுந்தரி கேட்டாள்.
அவனும் அதீத மணம் கொண்ட அழகிய மலர் ஒன்றை பரிசளித்தான். அதைச்சூடிக்கொண்டு அதிசுந்தரியும், மன்னனும் நந்தவனத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.
அச்சமயம் அவள் சூடியிருந்த மலரில் இருந்து வந்த மணத்தின் காரணமாக, ஒரு வண்டு வந்து அமர்ந்தது.
அந்த வண்டு வந்து அமர்ந்த சில நொடிகளில் அதிசுந்தரி மயங்கி விழுந்தாள். மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
பின்னர் தாதிப்பெண்கள் அதிசுந்தரி முகத்தில் நீர் தெளிக்க கண்விழித்தாள். மறுநாள் மன்னனும், அவனது இரண்டாவது மனைவியான வதனமாலாவும் அழகிய பௌர்ணமி நிலவொளியை இரசித்து கொண்டிருந்தனர்.
அச்சமயம், நிலவொளி அவள் மீது விழுந்த சிலவினாடிகளில் அவள் தேகத்தில் கொப்புளங்கள் வரத்தொடங்கின. மன்னன், நிலவொளியில் வதனமாலாவிற்கு கொப்புளங்கள் வருவதைக்கண்டு வியந்துப்போனான்.பின்னர் தாதிப்பெண்கள் வதனமாலாவிற்கு பன்னீர் கொண்டு கொப்புளங்களில் பூச, சிலநொடிகளில் சரியானது. மறுநாள் மன்னனும், அவனது மூன்றாவது மனைவியான மிதனசேகரியுடன் அன்புடன் பேசிக்கொண்டு இருந்தனர்.
அச்சமயம் தொலைவில் உலக்கையை கொண்டு நெல் குத்தும் சப்தம் கேட்டது. இந்த சப்தம் கேட்ட, சில நொடிகளில் மிதுனசேகரியின் கைவிரல்கள் வீங்க தொடங்கியது.இதைப்பார்த்த மன்னன் ஆச்சரியத்தில் அதிர்ச்சியாகிப்போனான் என்றுக்கூறி கதையை முடித்தது.
பின்னர் வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் அரசனுடைய மூன்று மனைவிமார்களில் யாருக்கு மிகவும் நுட்பமான உணர்வுள்ளது என்று கூறு? என்றது.இதைக்கேட்ட விக்ரமாதித்யன் பதில் கூறத்தொடங்கினான். அரசனின் மூன்று மனைவிகளும், ஏதோவொரு விதத்தில் நுட்பமான உணர்வினை கொண்டவர்கள் தான்.
ஆனால், அதில் மூன்றாவது மனைவிக்கு தான் மிகவும் நுட்பமான அறிவுள்ளது. ஏனெனில், அவளது தேகத்தை தீண்டாமலே, வெறும் சப்தத்தால் விரல்கள் வீங்கின.ஆனால் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் அவர்கள் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்றான்.
விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.


![Photo of திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் [பழம்பதிநாதர்] கோவில்](https://mgpaper.in/wp-content/uploads/2024/09/திருப்புனவாசல்-390x220.jpg)
