\
Story

விக்ரமாதித்தன் கதை | பகுதி 11 

வேதாளம் தனது ஆறாவது கதையை கூறத்தொடங்கியது.

வேதகிரி என்னும் அழகிய ஊரில் சந்திரசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அவனி என்ற ஒரு மகள் இருந்தாள். சந்திரசேகரன், தனது மகளான அவனிக்கு, ஒரு இளவரசனை மணபுரிந்து வைத்தான்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத காதலுடன் இருந்தனர். இளவரசனுக்கு, மிருகங்களின் மொழி அனைத்தும் தெரியும்.அவனும், அவனது மனைவியும் ஒரு கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், எறும்புகள் சாரைசாரையாக சென்றுக்கொண்டு இருந்தது.அப்பொழுது முன்னே சென்ற எறும்புகள் திடீரென நின்றன. இதனால், பின்னால் வந்த எறும்புகள் ஏன் நிற்கிறீர்கள் எனக்கேட்டது.

முன்னால் சென்ற எறும்புகள் வழியில் கட்டில் உள்ளது என்றன. அதற்கு, பின்னால் வந்த எறும்புகள், அதை தூக்கி எறிந்துவிட்டு செல்லுங்கள் என்றது. நாங்களும் அதை செய்ய தான் எண்ணியிருந்தோம். ஆனால், இருவர் கட்டிலில் அமர்ந்து உள்ளனர்.அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணுகிறோம். இல்லையெனில், கட்டிலை தூக்கி எறிந்துவிட்டு சென்றிருப்போம் என்றது. இதை கவனித்துக் கொண்டிருந்த இளவரசன், உரக்க சிரித்தான்.

இதை கண்ட இளவரசி, தனது கணவரிடம் திடீரென சிரிக்க காரணம் கேட்டாள். அவன் சொல்ல தொடங்கும் முன்பு, எறும்புகள் நாங்கள் பேசியதை வெளியில் கூறினால், உனது தலை வெடித்துவிடும் என்றது.இதனால் இளவரசன் கூற மறுத்தான். அதற்கு இளவரசி, தாங்கள் கூறவில்லை எனில், தாம் உயிரை விட்டுவிடுவதாக கூறினாள். அதனால் இளவரசன், இளவரசியிடம் மயானத்தில் கட்டைகளை அடுக்கி வை.

நான் அதில் படுத்துக்கொள்கிறேன். பின்னர் உன்னிடம், நான் சிரித்ததற்கான காரணத்தை கூறுகிறேன். நான் கூறிய உடனே, எனது தலை வெடித்து நான் இறந்து விடுவேன். நீ எனது உடலுக்கு தீ வைத்துவிட வேண்டும் எனக் கூறினான்.இதைக்கேட்ட இளவரசி சம்மதம் தெரிவித்தாள். இதைக்கேட்ட இளவரசன், மனம் நொந்துப்போனான். மயானத்தில் கட்டைகளை அடுக்கி வைத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், ஒரு ஆண் ஆடும், ஒரு பெண் ஆடும் அங்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.

அப்பொழுது, ஆண் ஆடான கிடாவானது, பெண் ஆட்டிடம் உறவுக்கொள்ள முயன்றது. அந்த பெண் ஆடானது ஒரு கிணற்றை காட்டி, அதன் உள்ளே இருக்கும் புல்லை பறித்து வந்துக்கொடுத்தால் உறவுக்கொள்ளலாம் என்றது.அதற்கு கிடாவானது பெண் ஆட்டிடம், ஒருவேளை நான் புல்லை பறிக்கச்சென்று கிணற்றில் விழ நேர்ந்தால், எனது உயிர் போய்விடும். அவ்வாறு உயிரை பணயம் வைத்து தான், உன்னிடம் உறவுக்கொள்ள வேண்டும் என்ற தலையெழுத்து எனக்கில்லை.

எனக்கு வேறு பெண் ஆடு கிடைக்கும், அதனுடன் நான் கூடி மகிழ்வேன் என்று கூறி அங்கிருந்து சென்றது.
இதையெல்லாம் கவனித்த இளவரசன், எதற்காக நான், உயிரை விட வேண்டும். அவ்விதம் உயிரை விட்டு இவளிடம் அந்த இரகசியத்தை கூற வேண்டிய அவசியமில்லை என எண்ணினான்.பின்னர், இளவரசியை பார்த்து, எனது உயிரை விட்டு, உன்னிடம் அந்த இரகசியத்தை கூற வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் வருகிறேன் எனக்கூறி சென்றான்.

பின்னர், வேறொரு பெண்ணை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம். வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் அறிவில் சிறந்தவர் யார்? எனக் கேட்டது.
பின்னர் பதிலை சொல், இல்லையேல் உனது தலையை கடித்து தின்று விடுவேன் என்று கூறியது. விக்ரமாதித்யனும் பதிலை கூறத்தொடங்கினான்.

சந்தேகமே வேண்டாம். அந்த ஆண் ஆடான கிடாவே அறிவில் சிறந்தது என்றான். விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலை கேட்டு, வேதாளம் கட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது.

விக்ரமாதித்யன், வேதாளத்தை மறுபடியும் பிடித்து கட்டி தோளில் சுமந்து செல்ல தொடங்கினான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

We Earn From this ads so Kindly support Us