விக்ரமாதித்தன் கதை | பகுதி 20

விக்ரமாதித்தனிடம், வேதாளம் தன்னுடைய பதினான்காவது கதையை கூறத்தொடங்கியது. மாயாபுரி என்னும் நாட்டை மச்சராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் அவனது நாட்டை பெரிதும் நேசித்து வந்தான்.அவனது நாட்டில் மாபெரும் வணிக நகரம் ஒன்று இருந்தது. அந்த நகரத்தில் பலவிதமான வணிக வியாபாரங்களும், வியாபாரிகளும் வசித்து வந்தனர்.
அவர்களில் அருணேசன் என்னும் வியாபாரி மட்டும் பெரும் புகழ் பெற்றிந்தான். அவன் எண்ணற்ற பல வியாபாரங்களை நேர்மையாக செய்து வந்தான்.அவனுக்கு பேரழகு கொண்ட ஒரு மகள் இருந்தாள். ஆனால், தந்தையின் நேர்மைக்கு சற்று எதிர்மறையாக இருந்தாள்.அவளுக்கு, அவளுடைய தந்தை சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசை இருந்தது.
அவளுக்காக வரன் பார்க்கவும் தொடங்கினான். ஆனால் அவள் தந்தைக்கு தெரியாமல் வேறொரு வாலிபன் ஒருவனுடன் தொடர்பில் இருந்தாள்.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டு இருந்தனர். இதனால் திருமணம் பற்றி எப்பொழுது பேசினாலும், மறுத்து வந்தாள்.ஆனால், இது ஏதும் தெரியாத அவளது தந்தையோ, ஒருவழியாக ஒரு நல்ல வாலிபனை பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வைத்தார்.அந்த வாலிபனும், தன்னுடைய மனைவியை மிகவும் அன்புடன் நேசித்து வந்தான்.ஆனால், அவள் தன்னுடைய காதலனை எண்ணியே வாழ்ந்து வந்தாள்.
இவ்வாறாக, தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு, அவள் இறந்துப்போனாள்.இந்த செய்தி அறிந்த அவளது காதலனும், என்ன செய்வது என அறியாமல் மனமுடைந்து இறந்துப்போனான்.
தன்னுடைய மனைவி நோயால் இறந்த சோகம் தாங்காமல், அவளை திருமணம் செய்த வாலிபனும் இறந்துபோனான் என்று கதையை முடித்தது வேதாளம்.பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் யார் சிறந்தவர்? எனக்கேட்டது.
இதைக்கேட்ட விக்ரமாதித்யன் பதில் சொல்லத்தொடங்கினான்.
ஒரு பெண் திருமணம் ஆன பிறகும், நேர்மையாக நடந்துக்கொள்ளவில்லை. அவளும், அவளது கள்ளக்காதலனும் இறந்துபோவது பெரிய விஷயமல்ல.ஆனால், திருமணம் ஆகிய இரண்டாவது மாதத்திலே தன் மனைவி மீதுக்கொண்ட காதலால் இறந்த, அவளது கணவனே சிறப்பிற்குரியவன் என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.
பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.



